சமீபத்தில் திருப்பதி செல்லும் வாய்ப்பு கிடைத்தது, வரும் வழியில் வேலூரில் பொற்கோவில் சென்று வாருங்கள் என்று உறவினர்கள் சொல்ல, பொற்கோவில் எப்படி கட்டியிருக்கிறார்கள் என்று பார்க்கவும் மற்றும் வரும் வழியில் போதிய நேரம் இருந்ததாலும் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தோம்.
நுழைவாயிலிலேயே செல்போன், கேமரா அனுமதியில்லை என்று போர்டு பெரிய எழுத்தில் தெரிகிறது. திருப்பதியின் தாக்கம் கோவிலின் வாசலிலேயே தெரிய ஆரம்பித்தது.
கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் வெளியே தரிசன நேரம் 2 மணி நேரம் என்று போர்டு மாட்டியிருக்கிறார்கள். சிறப்பு தரிசன டிக்கெட்டை (இருநூருக்கு மேல்) எடுத்தால் நேராக உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். நாங்கள் கூட்டம் இல்லாததால் தர்ம தரிசனத்திலேயே சென்றோம். வரிசை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் கோவில் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. கோவில் என்றால் கோபுரத்தைத் தான் தேடுவோம், ஆனால் அங்கே கோபுரம் தெரியாத மாதிரி கட்டியிருக்கிறார்கள். எத்தனை ஏக்கரில் கட்டியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஏனென்றால் கோவில் கேட்டுக்கு செல்லவே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.
அதுவுமில்லாமல் வரிசை ஆரம்பிக்கும்போதே விமான நிலையம் போல் அனைத்து சோதனையும் நடக்கிறது. திருப்பதியில் கூட இப்படி சோதனை செய்வதாகத் தெரியவில்லை. சோதனை முடிந்ததும் ஒரு பெரிய கூண்டில் அடைத்து வைத்ததைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் கூட்டமும் அதிகம் இல்லை, இவர்கள் ஏன் அடைத்து வைக்கிறார்கள் என்று நாங்கள் ஒருவொருக்கொருவர் கேட்டுக் கொண்டோம். கூண்டில் உள்ளே போய் அமர்ந்ததும் தான் ஏன் என்று கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஆறு அல்லது எட்டு கூண்டுகள் இருந்தும் ஒரு கூண்டில் தான் அடைத்து வைக்கிறார்கள்.
அதன் பிறகு LCD டிவியில் கும்பாபிஷேக நிகழ்ச்சியைக் காண்பிக்கிறார்கள். ஏனென்றால் வருபவர்களுக்கு எல்லாம் தெரிய வேண்டுமல்லவா.. உள்ளேயே சின்ன கேண்டீனும் இருக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்ததும் சிறிது நேரத்திலேயே கேட்டைத் திறக்கிறார்கள். சுற்றி சுற்றி வந்து ஒரு வழியாக கோவிலுடைய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம். இதை எல்லாம் வைத்து பார்க்கும்பொழுது திருப்பதி தான் அடிக்கடி நினைவுக்கு வந்தது. முதலிலேயே பக்காவாக யோசித்து பிளேன் பண்ணி கட்டியிருக்கிறார்கள். சரி ஒரு வழியாக உள்ளே வந்துவிட்டோம் என்று நினைத்தால் அட மறுபடியும் சோதனை செய்கிறார்கள். அட என்னங்க இது ஏர்போர்ட்ல கூட இப்படி செக் பண்ணி பார்த்ததில்லை.
அந்த இடத்தில் இருந்து தான் பிரம்மாண்டம் ஆரம்பிக்கிறது. அமைதியான ஒதுக்குப்புறத்தில் இவ்வளவு செலவு செய்து ஒரு கோவில் எப்படி கட்ட முடிந்தது என்ற வியப்பு எல்லோருக்குமே வரத்தான் செய்தது. உள்ளே சென்றதும் தான் கோபுரமே தெரிகிறது, மற்றும் உள்ளே ஒரு தோட்டத்திற்கு நடுவே கோவில் இருப்பது போல் தெரிகிறது. சுற்றி வரும் வழியெல்லாம் பல போர்டுகளைப் பார்க்க முடிகிறது. அதில் முக்கியமாக “அம்மா” என்று ஒருவர் கிட்டத்தட்ட எல்லா போர்டுகளிலும் தெரிகிறார். அதற்கு பிறகு தான் LCD டிவியில் பார்த்த ஞாபகம் வந்தது, அதே ஆசாமி தான்.. எல்லாமே… நாராயணி அம்மன் சிலையை விட அந்த “அம்மா” உருவம் தான் தெரிந்தது.
அந்த போட்டோவையும் “அம்மா” என்ற அந்த போர்டையும் பார்த்ததுமே எனக்குள் கடும் கோபம் தான் வந்தது, நான் நினைத்தது கோவிலுக்குள் சாமி மட்டும் தான் இருக்கும் என்று. மக்கள் மேல் தான் மீண்டும் மீண்டும் கோபம் வந்தது, இன்னும் இந்த காலத்திலயும் இதை எல்லாம் இன்னும் நம்பிட்டு இருக்கிறாங்களே என்று. என்னுடன் வந்தவர் வேறு அவருக்கு ஏதோ உள்ளே வந்ததும் ஏதோ “vibration” தெரியுதுன்னு சொன்னார். அவரிடம் பெரிய விவாதமே நடத்த வேண்டி இருந்தது. பத்தாததற்கு உள்ளே உள்ள சின்ன குளத்தில காசு, பணம், மோதிரம் மற்றும் என்னன்னவோ போடுறாங்க.. நம்ம ஆளுங்க இன்னும் மாறல. உள்ளே போகிற வரைக்கும் தெரியல… உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, நல்லா யோசிச்சுதான் கட்டியிருக்கிறாங்க. எப்படியோ நாராயணி அம்மனை கும்பிட்டு விட்டு வெளியே வந்து கூட வந்தவர்களிடம் பல வாக்குவாதம் நடந்து பின் ஒரு வழியாக சமாதானமானோம்.. ஆனா சும்மா சொல்லக்கூடாது அட்டகாசமாக கட்டியிருக்காங்க ஆனா சாமி பக்கத்தில இந்த மாதிரி “அம்மா” ன்னு சொல்லிட்டு வேறு எதற்கோ முடிவு பண்ணி இதை ஆரம்பித்து செய்வது போல் தெரிகிறது..
எப்படியோ நம்ம தமிழ்நாட்டுலேயும் பொற்கோவில் இருப்பது நமக்கு பெருமை தான்.