வேலை தேடி வெட்டியாக திரியும் தனுஷ் நயன்தாராவின் கம்பெனியில் முயற்சி செய்து நயனின் தயவில் வேலையும் வாங்கி விடுகிறார். பின்னர் தனுஷ் தனது காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்த அதை அவர் நிராகரிக்கிறார். தனது மகனின் காதலுக்காக பேச வரும் ரகுவரனை நயன்தாரா பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார். இந்த அவமானம் தாங்க முடியாமல் அன்று இரவே ரகுவரன் இறக்கிறார். அப்பாவின் திடீர் இழப்பும், காதல் தோல்வியும் தாங்க முடியாமல் தவிக்கும் நேரத்தில் நண்பன் தனது திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு அழைக்க, அங்கே செல்லும்போதுதான் தனது காதலி நயன்தாரா மணமகள் என்று தெரிகிறது. அதன் பின் நகரும் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் நம்மிடையே எதிர்பார்ப்பையும் உண்டாக்குவது படத்திற்கு பலம்.
நயன்தாரா நடிப்பில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக அலுவலகத்தில் நடக்கும் சண்டையில் ரகுவரன் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் போட்டி பளிச்சிடுகிறது. படத்தில் ரகுவரன் இறக்கும் காட்சியைப் பார்க்கும்போது அவரது உண்மையான இறப்பு மனதில் வந்து போகிறது. தனுஷின் நடிப்பில் இந்தப்படத்தில் சில காட்சிகளில் ரஜினியின் பாதிப்பைப் பார்க்க முடிகிறது, குறிப்பாக இன்டெர்வியூவிலும், பாம்பை கையில் எடுக்கும்போதும் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.
நயன்தாராவின் தங்கை தனுஷிடம் செய்யும் ரகளையும் அவரது நடிப்பும் மனதில் நிற்க வைக்கிறது. நயன்தாரா படத்தின் முதல் பாதியில் அதிகாரமாகவும் பின் பாதியில் அடக்கமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். சில கிராமத்து காட்சிகள், திணிக்கப்பட்ட சண்டைக்காட்சி என சில இடங்களில் நெருட வைத்தாலும் படம் சற்று வலுவாகவே செல்கிறது.
தனுஷ், ரகுவரன், நயன்தாரா என அனைவரும் நடிப்பில் பின்னியிருக்க, செல்வராகவனின் கதை மற்றும் மித்ரன் ஆர்.ஜவகரின் உழைப்பு படத்தின் வெற்றிக்குக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
யாரடி நீ மோகினி - ரசிக்கலாம்.