பதிந்தவர் சூர்யா மேல் ஜூன் 21, 2008
கமல் பத்து வேடங்களில் நடித்து இரண்டு வருட பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பின் கம்பீரமாக
சவாலுடன் திரைக்கு வந்திருக்கிறது தசாவதாரம் படம்.
படத்தின் கதை 12 ம் நூற்றாண்டில் துவங்கி 21 ம் நூற்றாண்டில் முடிகிறது. படத்தின் துவக்கமே அசத்தலான வித்தியாசமான காமிரா பார்வையுடன் துவங்குகிறது. 12 ம் நூற்றாண்டு சோழர் கால சைவ, வைணவ சண்டையுடன் கதை ஆரம்பிக்கும்போதே பிரம்மாண்டமும் ஆரம்பமாகிறது. வைணவ இளைஞனாக வரும் ரங்கராஜன் நம்பி (கமல் 1) சோழ மன்னன் “ஓம் நமச்சிவாய” என்று சொல்லச் சொல்ல அதற்கு நம்பி “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லி சாவுக்குத் துணிகிறார். சோழர் காலத்து காட்சியில் வரும் பிண்ணனி இசை மற்றும் வாலியின் “கல்லை மட்டும் கண்டால்…” பாடல் அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது.
அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறை விஞ்ஞானியாக பணிபுரியும் கோவிந்த் (கமல் 2) குழு உலகையே அழிக்கும் வைரஸ் ஒன்றைக் கண்டு பிடிக்கிறார்கள். அதை அக்குழுவின் மேலதிகாரி தீவிரவாதிக்கு விலை பேச அது கமலுக்கு தெரிந்து அந்த வைரசைக் கடத்தி இந்தியா வருகிறார். அவரை அதிபர் புஷ்சின் (கமல் 3) உத்திரவுப்படி எஃப் பி ஐ மற்றும் கூலிப்படை வில்லன் பிளெட்சர் (கமல் 4) துரத்த, பின் ஆக்சன், சேஸிங் என படம் செல்கிறது. அமெரிக்க அதிபர் புஷ் வேடத்தில் வரும் கமல், அவரது பேசும் விதம் மற்றும் சில வசனங்களில் புஷ்சையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.
உளவுத்துறை அதிகாரியாக வரும் பல்ராம் நாய்டு (கமல் 5) நகைச்சுவையில் பிண்ணி எடுக்கிறார். அவரது பேச்சு, அசைவுகள் மற்றும் அனைத்திலும் தெலுங்கு கார் ஆகவே மாறியிருக்கிறார்.
கிருஷ்ணவேணி பாட்டி வேடத்தில் வரும் கமல் (கமல் 6) தோற்றத்தில் சற்று குள்ளமாக நடித்திருப்பது அருமை. பஞ்சாப் பாடகராக வரும் கமல் (கமல் 7) சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். தலித் இளைஞனாக வரும் பூவராகவன் (கமல் 8 ) பேச்சில் கோபம் தெறிக்கிறது. ஜப்பான் கராத்தே மாஸ்டராக வரும் கமல் (கமல் 9) கடைசியில் வரும் சண்டை காட்சியிலும், சுனாமி வருவதை ஜப்பான் கமல் மூலம் சொல்வதும் கமலின் நுட்பத்தைக் காட்டுகிறது. முஸ்லிம் அப்பாவி இளைஞனாக வரும் கமலின் (கமல் 10) ஏழு அடி உயரம் வியக்க வைக்கிறது. அசின் அக்ரகாரத்து பெண்ணாகவே வலம் வருகிறார்.
ஒரு சில இடங்களில் சற்று உற்றுப் பார்த்தால் மட்டுமே கமல் வருவதும், பேசும் வசனங்களும் தெரிகிறது. ஒரே காட்சியில் இரண்டு மூன்று கமல் வருவதும் போவதும் மிக நேர்த்தியாக நமக்கு எந்த விதத்திலும் தெரியாமல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது அருமை.
கமலின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் பேச்சு, பாவனை என அவர் வித்தியாசம் காட்டியிருப்பது அவரின் அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. ரவிவர்மாவின் ஒளிப்பதிவு, தேவி ஸ்ரீபிரசாத்தின் பிண்ணனி இசை, கமலின் நடிப்பு மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் உழைப்பு படத்தின் வெற்றிக்கு முதுகெழும்பாக அமைகிறது. படத்தில் வரும் சுனாமி மற்றும் சோழர் காலத்து காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் மிக அருமையாக காண்பித்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.
தசாவதாரம் – தமிழ் திரையுலகில் மைல் கல்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: கமல், தசாவதாரம் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் April 21, 2008
வேலை தேடி வெட்டியாக திரியும் தனுஷ் நயன்தாராவின் கம்பெனியில் முயற்சி செய்து நயனின் தயவில் வேலையும் வாங்கி விடுகிறார். பின்னர் தனுஷ் தனது காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்த அதை அவர் நிராகரிக்கிறார். தனது மகனின் காதலுக்காக பேச வரும் ரகுவரனை நயன்தாரா பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார். இந்த அவமானம் தாங்க முடியாமல் அன்று இரவே ரகுவரன் இறக்கிறார். அப்பாவின் திடீர் இழப்பும், காதல் தோல்வியும் தாங்க முடியாமல் தவிக்கும் நேரத்தில் நண்பன் தனது திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு அழைக்க, அங்கே செல்லும்போதுதான் தனது காதலி நயன்தாரா மணமகள் என்று தெரிகிறது. அதன் பின் நகரும் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் நம்மிடையே எதிர்பார்ப்பையும் உண்டாக்குவது படத்திற்கு பலம்.
நயன்தாரா நடிப்பில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக அலுவலகத்தில் நடக்கும் சண்டையில் ரகுவரன் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் போட்டி பளிச்சிடுகிறது. படத்தில் ரகுவரன் இறக்கும் காட்சியைப் பார்க்கும்போது அவரது உண்மையான இறப்பு மனதில் வந்து போகிறது. தனுஷின் நடிப்பில் இந்தப்படத்தில் சில காட்சிகளில் ரஜினியின் பாதிப்பைப் பார்க்க முடிகிறது, குறிப்பாக இன்டெர்வியூவிலும், பாம்பை கையில் எடுக்கும்போதும் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.
நயன்தாராவின் தங்கை தனுஷிடம் செய்யும் ரகளையும் அவரது நடிப்பும் மனதில் நிற்க வைக்கிறது. நயன்தாரா படத்தின் முதல் பாதியில் அதிகாரமாகவும் பின் பாதியில் அடக்கமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். சில கிராமத்து காட்சிகள், திணிக்கப்பட்ட சண்டைக்காட்சி என சில இடங்களில் நெருட வைத்தாலும் படம் சற்று வலுவாகவே செல்கிறது.
தனுஷ், ரகுவரன், நயன்தாரா என அனைவரும் நடிப்பில் பின்னியிருக்க, செல்வராகவனின் கதை மற்றும் மித்ரன் ஆர்.ஜவகரின் உழைப்பு படத்தின் வெற்றிக்குக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
யாரடி நீ மோகினி - ரசிக்கலாம்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: தனுஷ், நயன்தாரா, ரகுவரன் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் மார்ச் 21, 2008

கமர்சியல் மசாலா படங்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு அருமையான விறுவிறுப்பான திரைப்படம். இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் ஒவ்வொருவரையும் கையாண்ட விதம் அற்புதம். பிரசன்னாவிற்கு கொடுத்து இருக்கும் வில்லன் பாத்திரத்தை அவருடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அருமையாக நிறைவு செய்திருக்கிறார்.
காவல் நிலைய குடியிருப்பில் வசிக்கும் இரு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை மிக நேர்த்தியாக காட்டி இருக்கும் படம் தான் அஞ்சாதே. நரேனும் அஜ்மல்அமிரும் நெருங்கிய நண்பர்கள், இருவரின் தந்தையும் போலிஸ் கான்ஸ்டபிள்கள். பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் நரேனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்ததும், தன் கனவே போலீஸ் வேலை தான் என்று முழு மூச்சாக இருந்தும் தனக்கு வேலை கிடைக்காமல் போனது அஜ்மலுக்கு கோபத்தை வரவழைக்கிறது. இதனால் நரேனை அறவே வெறுக்க ஆரம்பிப்பதுடன், குடிப்பழக்கத்துக்கும் அடிமை ஆகி பிரசன்னாவின் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறார்.
பிரசன்னா இளம் பெண்களை கடத்தி கற்பழித்து பணம் பறிக்கும் வில்லனாக இந்தப்படத்தில் வருகிறார். இவரின் முடி நீளமாக வைத்திருந்ததாலோ என்னவோ இவரின் முகப்பரிமானங்களைப் பார்க்க முடியாமல் போகிறது. பாண்டியராஜன் “லோகு” கேரக்டரில் வில்லனாக வந்து கலக்கி இருக்கிறார். முக்கியமாக “கத்தாழை கண்ணால குத்தாத நீ என்ன….” பாட்டில் அவரின் அட்டகாசமான டான்ஸ் மூவ்மெண்ட் ரசிக்கும்படியாக இருக்கிறது.
கடைசியில் பிரசன்னா கூட்டத்தை பிடிக்கும் பொன்வண்ணன் டீமில் நரேனும் சேர்கிறார், இதிலிருந்து படம் படு விறுவிறுப்பாக போகிறது. படம் மிக நீளமாக இருந்த போதும் நேர்த்தியான திரைக்கதையால் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுவது ஒன்றும் பெரிய இலுவையாகத் தெரியவில்லை.
மற்றபடி பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் என அனைவரும் அவர்களுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசை அருமையாக போட்டிருக்கிறார் சுந்தர் சி. பாபு. பாட்டுக்களில் வரும் நடன அசைவுகள் “சித்திரம் பேசுதடி – வாழ மீனுவை” ஞாபகப்படுத்துகின்றன. மிஷ்கின் ஒரு நல்ல பாடகர் என “அச்சம் தவிர்…” மற்றும் “கண்ணதாசன் காரைக்குடி…” பாட்டுக்கள் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
மொத்தத்தில் இந்தப்படம் நரேன் மற்றும் மிஷ்கினுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தை தொய்வில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கிய மிஷ்கினுக்கு நமது வாழ்த்துக்கள்!
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அஜ்மல், அஞ்சாதே, எம்.எஸ்.பாஸ்கர், நரேன், பாண்டியராஜன், பிரசன்னா, பொன்வண்ணன், மிஷ்கின் | 4 மறுமொழிகள் »