‘சினிமா’ பகுப்புக்கான தொகுப்பு
பதிந்தவர் சூர்யா மேல் பெப்ரவரி 23, 2009
தமிழகத்தின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காகவும், “ஜெய் ஹோ” என்ற அந்தப் படத்தின் பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
“ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துக்காக திரைக்கதை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங் உட்பட 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை 2 பிரிவுகளில் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை பெறும் ரஹ்மானுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழ் திரையுலகம் சார்பில் கே.பாலசந்தர், கமல்ஹாசன், எஸ்.வி.சேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் திரையுலகம் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரமாண்டமான பாராட்டு விழாவும் மிக விரைவில் நடைபெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விருதைப் பெறுவதற்காக மேடையேறிய ரஹ்மான் இறுதியில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசி தனது நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மேலும் இப்படத்திற்கு சவுண்ட் மிக்சிங்கிற்கான விருது இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரெசுல் பூக்குட்டிக்கு கிடைத்ததும், இதனால் மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்து இவ்விருவரும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளனர்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: ஆஸ்கர் விருது, இசைப்புயல், ஏ.ஆர்.ரஹ்மான் | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 24, 2009
தமிழகத்தின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பெயர் இந்த ஆண்டு ’ஆஸ்கர் விருது’க்கு 3 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் உள்பட 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் 3 பிரிவுகளில் அதாவது இந்தப் படத்திற்கு இசை அமைத்ததற்காகவும் இரண்டு பாடல்களுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர் 3 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மானின் திரையுலக வாழ்வின் லட்சியமும் நமது எதிர்பார்ப்பும் வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஆஸ்கர் விருது அறிவிப்பில் தெரிந்துவிடும். இந்தியாவில் இதுவரை யாருக்கும் கிடைக்காத பெருமை இந்த ஆஸ்கர் விருதைப் பெறுவதின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: ஆஸ்கர் விருது, இசைப்புயல், ஏ.ஆர்.ரஹ்மான் | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 13, 2009
உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் நம் தமிழகத்தின்
” இசைப்புயல்” என வர்ணிக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஹாலிவுட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் “கோல்டன் குளோப்” விருது “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காகக் கிடைத்துள்ளது.
இந்த விருதைப் பெற்றதன் மூலம் கோல்டன் குளோப் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். மேலும் இந்த விருது ஆஸ்கார் விருதுக்கான நுழைவாயிலாகவே கருதப்படுவதால் ஆஸ்கார் விருதிற்கான கலைஞர்கள் பட்டியலில் நமது ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் நேரடியாக இடம்பெரும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றிருந்தாலும் இப்பொழுது உலக புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதைப் பெற்று உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: இசைப்புயல், ஏ.ஆர்.ரஹ்மான், கோல்டன் குளோப் | 9 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 3, 2009
மலேசியா வாசுதேவன்
தமிழ் திரைப்பட பாடகர்களில் மறக்க முடியாதவர்களில் பட்டியலில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. இவர் பாடிய பல பாடல்களை இன்று கேட்டாலும் அவை மலரும் நினைவுகள் போல் தான் தோன்றும். குறிப்பாக இவர் இளையராஜாவின் இசையில் பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததை யாராலும் மறக்க முடியாது.
அவர் பாடிய பாடல்களில் இன்றும் கேட்க கேட்க தூண்டும் பாடல்கள் ஏராளம் என்றாலும் இங்கே சில பாடல்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி – தர்மயுத்தம் (1979)
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு – சிகப்பு ரோஜாக்கள் (1978)
கோவில் மணி ஓசை தன்னை – கிழக்கே போகும் ரயில் (1978)
ஆயிரம் மலர்களே மலருங்கள் – நிறம் மாறாத பூக்கள் (1979)
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு நின்று – விடியும் வரை காத்திரு (1981)
கோடை கால காற்றே – பன்னீர் புஷ்பங்கள் (1981)
ஒரு தங்க ரதத்தில் – தர்மயுத்தம் (1979)
வான் மேகங்களே வாழ்த்துங்கள் – புதிய வார்ப்புகள் (1979)
பூங்காற்று திரும்புமா – முதல் மரியாதை (1985)
வெட்டி வேரு வாசம் – முதல் மரியாதை (1985)
வெள்ளை மனம் உள்ள மச்சான் – சின்ன வீடு (1985)
ரஜினிகாந்தின் படத்தில் இவர் பாடிய ஏராளமான பாட்டுக்கள் மறக்க முடியாதவை மட்டுமல்லாமல் இன்றும் எல்லா ஊர் திருவிழாக்களிலும் இவருடைய பாடல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இன்றும் திருவிழாக்களில் முதல் பாடல் மலேசியா வாசுதேவன் பாடிய “பொதுவாக என் மனசு தங்கம்” தான் முதலிடம்.
மனோ
M. S. விஸ்வநாதனின் கண்டுபிடிப்பான இவர் இளையராஜாவின் இசையில் 1980 ன் இறுதியிலிருந்து 1990 ன் இறுதி வரை பல ஹிட் பாடல்களைப் பாடிய பெருமை இவருக்குண்டு. குறிப்பாக மனோ மற்றும் சித்ரா கூட்டணியில் வந்த பாடல்கள் ஏராளம். இவர் பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த சில பாடல்கள்:
செண்பகமே செண்பகமே – எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
ஓ பாப்பா லாலி கண்மணி லாலி – இதயத்தை திருடாதே (1989)
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா – இதயத்தை திருடாதே (1989)
ஓம் நமஹா உருகும் உயிருக்கு – இதயத்தை திருடாதே (1989)
காவியம் பாடவா தென்றலே – இதயத்தை திருடாதே (1989)
நிலா காயும் நேரம் சரணம் – செம்பருத்தி (1992)
குடகு மலை காற்றில் வரும் பாட்டு – கரகாட்டக்காரன் (1989)
வா வா வா வா கண்ணா வா – வேலைக்காரன் (1987)
மலையாளக் கரையோரம் – ராஜாதி ராஜா (1989)
மலைக் கோவில் வாசலில் கார்த்திகை – வீரா (1994)
“செண்பகமே செண்பகமே” என்ற பாடலின் மூலம் புகழ் பெற்றவர், தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முத்து மற்றும் சிவாஜி படங்களுக்கு தெலுங்கில் ரஜினிகாந்திற்கு பின்னணி குரல் கொடுத்தவரும் இவரே.
தீபன் சக்கரவர்த்தி
என்னிடம் பல நண்பர்கள் இவர் பாடிய பாடலை கேட்டு விட்டு, இந்தப் பாடலைப் பாடியது யார் என்று கேட்டதுண்டு. பல சூப்ப்ர் ஹிட் பாடலைப் பாடிய இவரை பலருக்கு நினைவில்லாமல் போயிருக்கலாம். தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
விஜய் டி.வி தற்போது நடத்திக் கொண்டிருக்கும் “சூப்பர் சிங்கர் 2008″ ல் இவரைப் பார்த்ததும் இவர் பாடிய பாடல்கள் தான் என் மனதில் வந்து நின்றன. அவர் பாடி எனக்குப் பிடித்த சில பாடல்கள்:
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு – மெல்லப் பேசுங்கள் (1983)
பூங்கதவே தாழ்திறவாய் – நிழல்கள் (1980)
அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவல்காரன் (1988)
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு – கோபுர வாசலிலே (1991)
இவ்வளவு நன்றாகப் பாடும் திறமை மற்றும் இனிமையான குரல் வளம் இவரிடம் இருந்தும் ஒரு காலகட்டத்தில் இருந்தே இவருக்கு நமது இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு அதிகம் தராமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
இவர் புகழ் பெற்ற பழைய பாடகரான திரு. திருச்சி லோகநாதனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
.... இங்கே பதியப்பட்டது சினிமா | குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ் பாடகர்கள், தீபன் சக்கரவர்த்தி, மனோ, மலேசியா வாசுதேவன், Mano | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் ஜூன் 21, 2008
கமல் பத்து வேடங்களில் நடித்து இரண்டு வருட பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பின் கம்பீரமாக
சவாலுடன் திரைக்கு வந்திருக்கிறது தசாவதாரம் படம்.
படத்தின் கதை 12 ம் நூற்றாண்டில் துவங்கி 21 ம் நூற்றாண்டில் முடிகிறது. படத்தின் துவக்கமே அசத்தலான வித்தியாசமான காமிரா பார்வையுடன் துவங்குகிறது. 12 ம் நூற்றாண்டு சோழர் கால சைவ, வைணவ சண்டையுடன் கதை ஆரம்பிக்கும்போதே பிரம்மாண்டமும் ஆரம்பமாகிறது. வைணவ இளைஞனாக வரும் ரங்கராஜன் நம்பி (கமல் 1) சோழ மன்னன் “ஓம் நமச்சிவாய” என்று சொல்லச் சொல்ல அதற்கு நம்பி “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லி சாவுக்குத் துணிகிறார். சோழர் காலத்து காட்சியில் வரும் பிண்ணனி இசை மற்றும் வாலியின் “கல்லை மட்டும் கண்டால்…” பாடல் அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது.
அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறை விஞ்ஞானியாக பணிபுரியும் கோவிந்த் (கமல் 2) குழு உலகையே அழிக்கும் வைரஸ் ஒன்றைக் கண்டு பிடிக்கிறார்கள். அதை அக்குழுவின் மேலதிகாரி தீவிரவாதிக்கு விலை பேச அது கமலுக்கு தெரிந்து அந்த வைரசைக் கடத்தி இந்தியா வருகிறார். அவரை அதிபர் புஷ்சின் (கமல் 3) உத்திரவுப்படி எஃப் பி ஐ மற்றும் கூலிப்படை வில்லன் பிளெட்சர் (கமல் 4) துரத்த, பின் ஆக்சன், சேஸிங் என படம் செல்கிறது. அமெரிக்க அதிபர் புஷ் வேடத்தில் வரும் கமல், அவரது பேசும் விதம் மற்றும் சில வசனங்களில் புஷ்சையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.
உளவுத்துறை அதிகாரியாக வரும் பல்ராம் நாய்டு (கமல் 5) நகைச்சுவையில் பிண்ணி எடுக்கிறார். அவரது பேச்சு, அசைவுகள் மற்றும் அனைத்திலும் தெலுங்கு கார் ஆகவே மாறியிருக்கிறார்.
கிருஷ்ணவேணி பாட்டி வேடத்தில் வரும் கமல் (கமல் 6) தோற்றத்தில் சற்று குள்ளமாக நடித்திருப்பது அருமை. பஞ்சாப் பாடகராக வரும் கமல் (கமல் 7) சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். தலித் இளைஞனாக வரும் பூவராகவன் (கமல் 8 ) பேச்சில் கோபம் தெறிக்கிறது. ஜப்பான் கராத்தே மாஸ்டராக வரும் கமல் (கமல் 9) கடைசியில் வரும் சண்டை காட்சியிலும், சுனாமி வருவதை ஜப்பான் கமல் மூலம் சொல்வதும் கமலின் நுட்பத்தைக் காட்டுகிறது. முஸ்லிம் அப்பாவி இளைஞனாக வரும் கமலின் (கமல் 10) ஏழு அடி உயரம் வியக்க வைக்கிறது. அசின் அக்ரகாரத்து பெண்ணாகவே வலம் வருகிறார்.
ஒரு சில இடங்களில் சற்று உற்றுப் பார்த்தால் மட்டுமே கமல் வருவதும், பேசும் வசனங்களும் தெரிகிறது. ஒரே காட்சியில் இரண்டு மூன்று கமல் வருவதும் போவதும் மிக நேர்த்தியாக நமக்கு எந்த விதத்திலும் தெரியாமல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது அருமை.
கமலின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் பேச்சு, பாவனை என அவர் வித்தியாசம் காட்டியிருப்பது அவரின் அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. ரவிவர்மாவின் ஒளிப்பதிவு, தேவி ஸ்ரீபிரசாத்தின் பிண்ணனி இசை, கமலின் நடிப்பு மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் உழைப்பு படத்தின் வெற்றிக்கு முதுகெழும்பாக அமைகிறது. படத்தில் வரும் சுனாமி மற்றும் சோழர் காலத்து காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் மிக அருமையாக காண்பித்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.
தசாவதாரம் – தமிழ் திரையுலகில் மைல் கல்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: கமல், தசாவதாரம் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் ஜூன் 12, 2008
கான்ஸ் திரைப்பட விழாவில் ‘பில்லா’ திரைப்படம் திரையிடப்பட்டது நமது தமிழ் திரை உலகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் தான். உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஜாம்பவான்கள் மற்றும் அனைத்துலக ரசிகர்களும் பாராட்டும் ஒரு வாய்ப்பு நமது தற்போதைய ரீமேக் ‘பில்லா’ படத்திற்கு கிடைத்தது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு என்றெ சொல்லலாம். ஸ்கிரீனிங் முறையில் திரையிடப்பட்ட இந்த விழாவில் ‘பில்லா’ படம் ‘மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்’ முறையில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நமது தமிழ் திரைப்படங்களின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியிருப்பது நமது தமிழ் திரையுலக அயராது உழைப்புக்கு கிடைத்த வெற்றிகளில் ஒன்று.
.... இங்கே பதியப்பட்டது சினிமா | குறிச்சொல்லிடப்பட்டது: கான்ஸ், பில்லா | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் April 21, 2008
வேலை தேடி வெட்டியாக திரியும் தனுஷ் நயன்தாராவின் கம்பெனியில் முயற்சி செய்து நயனின் தயவில் வேலையும் வாங்கி விடுகிறார். பின்னர் தனுஷ் தனது காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்த அதை அவர் நிராகரிக்கிறார். தனது மகனின் காதலுக்காக பேச வரும் ரகுவரனை நயன்தாரா பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார். இந்த அவமானம் தாங்க முடியாமல் அன்று இரவே ரகுவரன் இறக்கிறார். அப்பாவின் திடீர் இழப்பும், காதல் தோல்வியும் தாங்க முடியாமல் தவிக்கும் நேரத்தில் நண்பன் தனது திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு அழைக்க, அங்கே செல்லும்போதுதான் தனது காதலி நயன்தாரா மணமகள் என்று தெரிகிறது. அதன் பின் நகரும் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் நம்மிடையே எதிர்பார்ப்பையும் உண்டாக்குவது படத்திற்கு பலம்.
நயன்தாரா நடிப்பில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக அலுவலகத்தில் நடக்கும் சண்டையில் ரகுவரன் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் போட்டி பளிச்சிடுகிறது. படத்தில் ரகுவரன் இறக்கும் காட்சியைப் பார்க்கும்போது அவரது உண்மையான இறப்பு மனதில் வந்து போகிறது. தனுஷின் நடிப்பில் இந்தப்படத்தில் சில காட்சிகளில் ரஜினியின் பாதிப்பைப் பார்க்க முடிகிறது, குறிப்பாக இன்டெர்வியூவிலும், பாம்பை கையில் எடுக்கும்போதும் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.
நயன்தாராவின் தங்கை தனுஷிடம் செய்யும் ரகளையும் அவரது நடிப்பும் மனதில் நிற்க வைக்கிறது. நயன்தாரா படத்தின் முதல் பாதியில் அதிகாரமாகவும் பின் பாதியில் அடக்கமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். சில கிராமத்து காட்சிகள், திணிக்கப்பட்ட சண்டைக்காட்சி என சில இடங்களில் நெருட வைத்தாலும் படம் சற்று வலுவாகவே செல்கிறது.
தனுஷ், ரகுவரன், நயன்தாரா என அனைவரும் நடிப்பில் பின்னியிருக்க, செல்வராகவனின் கதை மற்றும் மித்ரன் ஆர்.ஜவகரின் உழைப்பு படத்தின் வெற்றிக்குக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
யாரடி நீ மோகினி - ரசிக்கலாம்.
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: தனுஷ், நயன்தாரா, ரகுவரன் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் சூர்யா மேல் மார்ச் 23, 2008
சஹாரா – சிவாஜி
ஜூன் போனால் – உன்னாலே உன்னாலே
காற்றின் – மொழி
ஏன் எனக்கு – நான் அவன் இல்லை
அக்கம் பக்கம் – கிரீடம்
யாரோ – சென்னை 28
டோலு டோலு தான் – போக்கிரி
எங்கேயும் எப்போதும் – பொல்லாதவன்
ஜூன் ஜூலை – கல்லூரி
பேசுகிறேன் – சத்தம் போடாதே
.... இங்கே பதியப்பட்டது சினிமா | குறிச்சொல்லிடப்பட்டது: 2007, பாடல்கள் | Leave a Comment »
பதிந்தவர் சூர்யா மேல் மார்ச் 21, 2008

கமர்சியல் மசாலா படங்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு அருமையான விறுவிறுப்பான திரைப்படம். இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் ஒவ்வொருவரையும் கையாண்ட விதம் அற்புதம். பிரசன்னாவிற்கு கொடுத்து இருக்கும் வில்லன் பாத்திரத்தை அவருடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அருமையாக நிறைவு செய்திருக்கிறார்.
காவல் நிலைய குடியிருப்பில் வசிக்கும் இரு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை மிக நேர்த்தியாக காட்டி இருக்கும் படம் தான் அஞ்சாதே. நரேனும் அஜ்மல்அமிரும் நெருங்கிய நண்பர்கள், இருவரின் தந்தையும் போலிஸ் கான்ஸ்டபிள்கள். பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் நரேனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்ததும், தன் கனவே போலீஸ் வேலை தான் என்று முழு மூச்சாக இருந்தும் தனக்கு வேலை கிடைக்காமல் போனது அஜ்மலுக்கு கோபத்தை வரவழைக்கிறது. இதனால் நரேனை அறவே வெறுக்க ஆரம்பிப்பதுடன், குடிப்பழக்கத்துக்கும் அடிமை ஆகி பிரசன்னாவின் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறார்.
பிரசன்னா இளம் பெண்களை கடத்தி கற்பழித்து பணம் பறிக்கும் வில்லனாக இந்தப்படத்தில் வருகிறார். இவரின் முடி நீளமாக வைத்திருந்ததாலோ என்னவோ இவரின் முகப்பரிமானங்களைப் பார்க்க முடியாமல் போகிறது. பாண்டியராஜன் “லோகு” கேரக்டரில் வில்லனாக வந்து கலக்கி இருக்கிறார். முக்கியமாக “கத்தாழை கண்ணால குத்தாத நீ என்ன….” பாட்டில் அவரின் அட்டகாசமான டான்ஸ் மூவ்மெண்ட் ரசிக்கும்படியாக இருக்கிறது.
கடைசியில் பிரசன்னா கூட்டத்தை பிடிக்கும் பொன்வண்ணன் டீமில் நரேனும் சேர்கிறார், இதிலிருந்து படம் படு விறுவிறுப்பாக போகிறது. படம் மிக நீளமாக இருந்த போதும் நேர்த்தியான திரைக்கதையால் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுவது ஒன்றும் பெரிய இலுவையாகத் தெரியவில்லை.
மற்றபடி பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் என அனைவரும் அவர்களுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசை அருமையாக போட்டிருக்கிறார் சுந்தர் சி. பாபு. பாட்டுக்களில் வரும் நடன அசைவுகள் “சித்திரம் பேசுதடி – வாழ மீனுவை” ஞாபகப்படுத்துகின்றன. மிஷ்கின் ஒரு நல்ல பாடகர் என “அச்சம் தவிர்…” மற்றும் “கண்ணதாசன் காரைக்குடி…” பாட்டுக்கள் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
மொத்தத்தில் இந்தப்படம் நரேன் மற்றும் மிஷ்கினுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தை தொய்வில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கிய மிஷ்கினுக்கு நமது வாழ்த்துக்கள்!
.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: அஜ்மல், அஞ்சாதே, எம்.எஸ்.பாஸ்கர், நரேன், பாண்டியராஜன், பிரசன்னா, பொன்வண்ணன், மிஷ்கின் | 4 மறுமொழிகள் »