சூர்யா ப‌திவுக‌ள்

‘அனுபவம்’ பகுப்புக்கான தொகுப்பு

த‌டா அருவியும் ப‌ய‌ண‌ அனுப‌வ‌மும்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 24, 2009

நான் சென்னையில் ப‌ணிபுரிந்து கொண்டிருந்த‌ நேர‌ம் அது. என்னுட‌ன் இருந்த‌ என‌து ந‌ண்ப‌ர் அப்பொழுது அமெரிக்கா சென்று விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் க‌ழித்து வ‌ந்திருந்தார். அங்கே அவ‌ர் பார்த்த‌ ம‌லைக‌ளைப் பற்றியும் அங்கிருந்த‌ அருவிக‌ளைப் பற்றியும் விவ‌ரித்த‌வ‌ர், த‌ன‌க்கு அருவிக‌ள் இருக்கும் இட‌ங்க‌ள் என்றால் மிக‌வும் பிடிக்கும் என்றும் த‌மிழ் நாட்டில் உள்ள‌ அருவிக‌ளில் குற்றால‌த்தைத் த‌விர‌ வேறு எங்கும் சென்ற‌தில்லை, இம்முறையாவ‌து நேர‌ம் கிடைக்கும் பொழுதெல்லாம் அருகில் இருக்கும் அருவிக‌ளுக்குச் சென்று வ‌ர‌வேண்டும் என்றார்.

நான் அவ‌ரிட‌ம் த‌மிழ்நாடு ம‌ற்றும் கேர‌ளாவில் உள்ள அனைத்து இட‌ங்க‌ளுக்கும் சென்று வ‌ந்த‌ அனுப‌த்தையும், பார்த்த‌ அருவிக‌ளைப் ப‌ற்றியும் கூறிய‌வுட‌ன் அவ‌ர் என்னை நேர‌ம் கிடைக்கும்போது ஒவ்வொரு இட‌மாக‌ சென்று வ‌ர‌லாம், எங்கே இங்கே சென்னைக்கு அருகில் எந்த ஒரு அருவியும் இல்லை என்றதும், நான் இங்கு சென்னைக்கு அருகில் இர‌ண்டு அருவிக‌ள் உள்ள‌து என்றும் அத‌ன் பெய‌ர் கொனே ம‌ற்றும் த‌டா என்றதும் அவ‌ர் உட‌னே இந்த‌ வார‌ம் எதாவ‌து ஒரு அருவிக்கு சென்று வ‌ர‌லாம் என‌ ஆர‌ம்பித்துவிட்டார். உட‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ரை அழைத்துக்கொண்டு அந்த‌ வார‌ இருதியிலேயே த‌டா அருவிக்கு செல்ல‌த் தயாரானோம். எங்க‌ளுக்கு இய‌ல்பாக‌வே வார‌ இறுதியிலும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும், அந்த‌ வார‌ வேலையை எல்லாம் ஒத்திப்போட்டு விட்டு அனைத்தையும் ம‌ற‌ந்து சென்னையிலிருந்து ச‌னிக்கிழ‌மை காலை ஏழு ம‌ணிக்கெல்லாம் கிள‌ம்பிவிட்டோம்.

சென்னையிலிருந்து கால‌ஹ‌ஸ்தி சாலையில் சுமார் 95 கி.மீட்ட‌ர் தொலைவில் தான் த‌டா உள்ள‌து. த‌டா அருவிக்கு செல்ல‌ வேண்டுமானால் வ‌ர‌த‌ய்யா பாளைய‌ம் சென்று அங்கிருந்துதான் ஒரு குருகிய‌ ரோட்டில் உப்ப‌ல‌ம‌டுகு செக்போஸ்ட் வ‌ழியாக‌ செல்ல‌ வேண்டியிருக்கிற‌து. உப்பல‌ம‌டுகு செக்போஸ்ட்டில் இருந்து சுமார் 10 கி.மீட்ட‌ர் தூர‌ம் காட்டுக்குள் சென்று அதுவும் க‌ர‌டு முர‌டான‌ பாதையில் ஒரு இட‌த்திற்கு மேல் காரில் செல்ல‌ முடிவ‌தில்லை. நாங்க‌ள் முய‌ன்ற வ‌ரை உள்ளே சென்று ஒரு வீட்டின் அருகில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கார‌ரிட‌ம் வ‌ழிகேட்டு அவ‌ரிட‌ம் நாங்க‌ள் வ‌ரும் வ‌ரை வ‌ண்டியை இங்கு விட்டுச் செல்வ‌தையும் கூறிப் புற‌ப்ப‌ட்டோம்.

அவ‌ர் சொன்ன‌ பாதை வ‌ழியாக‌ நாங்க‌ள் ந‌டையைக் க‌ட்ட‌ ஆர‌ம்பித்தோம். நாங்க‌ள் இங்கு வ‌ருவ‌த‌ற்கு முன்பே ந‌ன்கு இந்த‌ இட‌த்தைப் பற்றி தெரிந்திருந்த‌தால், ந‌ட‌க்கும் தூர‌த்தைப் ப‌ற்றியும் த‌னிமையான ஆள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாத‌ காட்டுப் பாதை ம‌ற்றும் இங்கு ந‌ட‌க்கும் வ‌ண்டி ச‌ம்ப‌த்த‌ப்பட்ட‌ திருட்டுக‌ள் ப‌ற்றியும் அறிந்து வைத்திருந்த‌து மிக‌வும் உத‌வியாக‌ இருந்த‌து. இர‌ண்டு கி.மீட்ட‌ர் ந‌ட‌ந்த‌தும் ம‌லைய‌டிவார‌ம் தெரிந்த‌து, அங்கு ஒரு சான்ட்ரோ கார் நிற்ப‌தைப் பார்த்த‌தும் யாரோ ந‌ம‌க்கு முன்ன‌ர் வ‌ந்திருக்கிறார்க‌ள் என்று சொல்லி காரை நெருங்கினோம்.

அங்கு சான்ட்ரோ காரின் க‌த‌வுக் கண்ணாடி உடைந்திருப்ப‌தைப் பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தோம். அந்த‌ இட‌த்தில் யாருமே இல்லை, ந‌ல்ல‌ வேலை ந‌ம் வ‌ண்டியை ஒருவ‌ர் வீட்டில் நிறுத்தி வ‌ந்தோம் என‌ நினைத்து ச‌ற்று ஆறுத‌ல் அடைந்து மீண்டும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தோம். அந்த‌ இட‌த்தில் இருந்து ந‌ல்ல‌ அட‌ர்த்தியான‌ ம‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ காடு ஆர‌ம்பிக்கிற‌து, சிலு சிலுவென‌ காற்று அடிக்க தொட‌ர்ந்து ம‌லையில் எற‌ ஆர‌ம்பித்தோம்.

சிறிது தூர‌த்தில் அருவியில் இருந்து வ‌ரும் த‌ண்ணீர் சிறு ஆறு போல‌ ஓடிக்கொண்டிருந்த‌து. அதை ஒட்டியே பாறைகளுக்கு ந‌டுவே இருக்கும் இடுக்குக‌ளில் ஏற‌ ஆர‌ம்பித்தோம், சிறிது தூர‌ம் சென்ற‌தும் குடும்ப‌த்துட‌ன் நான்கு பேர் குளித்துக் கொண்டு இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளைப் பார்த்த‌தும் தான் எங்க‌ளுக்கு நாங்க‌ள் வ‌ரும் வ‌ழியில் நின்றிருந்த‌ சான்ட்ரோ கார் ஞாப‌க‌ம் வ‌ந்து அவ‌ர்க‌ளிட‌ம் நாங்க‌ள் பார்த்த‌தை விள‌க்கிய‌தும் அவ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் ப‌த‌ட்ட‌த்துக்குள்ளானதைப் பார்த‌த‌தும் நாங்க‌ள் சார் இங்கு இது சாதார‌ண‌மாக‌ இந்த‌ இட‌த்தில் ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் தான் நீங்க‌ள் க‌வ‌லைப்ப‌டாதீர்க‌ள் என்று சொல்லிவிட்டு மேலே உள்ள‌ அருவியை நோக்கி நடையை க‌ட்டினோம். த‌ங்க‌ள் குடும்ப‌த்துட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ள் குளிக்கும் இட‌த்தை தாண்டி செல்ல‌ முடியாது (மாட்டார்க‌ள்) என்ப‌தை மேலே ஏறும்போது நாங்க‌ள் தெரிந்துகொண்டோம்.

க‌ர‌டு முர‌டான‌ வ‌ழுக்கும் ப‌றைகளுக்கு இடையில் ப‌ல‌ முறை ச‌றுக்கி விழுந்து மேலே உள்ள‌ அருவிக்கு சென்றே தீர‌வேண்டும் என்ற‌ ஒரு வைராக்கிய‌த்துட‌ன் ஏற, இடையில் சிறிது தூர‌த்தில் சின்ன‌ அருவி ஒன்றை பார்க்க‌ நேர்ந்த‌து. அது போல் உள்ள‌ அருவியை நாம் திரைப்ப‌ட‌த்தில் தான் பார்த்திருப்போம், ஆம் அது ‘மின்சார‌ க‌ன‌வு’ ப‌ட‌த்தில் ‘த‌ங்க‌த் தாம‌ரை ம‌க‌ளே’ என்ற‌ பாட‌லில் வ‌ரும் அருவி மாதிரியே இருந்த‌து. அது போல் அருவியைப் பார்த்தால் யாருக்குமே அந்த‌ அருவியில் போய் ச‌ற்று நேர‌ம் குளிக்க‌த் தோன்றுவ‌து இய‌ல்பு தான். நாங்க‌ள் சிறிது நேர‌ம் குளித்து விட்டு கிள‌ம்பும்போது எங்க‌ளுட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ருக்கு அந்த‌ அருவியை விட்டு வ‌ர‌ ம‌ன‌மே வ‌ர‌வில்லை.

ஏனென்றால் மேலும் நாங்க‌ள் மெயின் அருவியை அடைய சிறிது தூர‌ம் வ‌ழுவ‌ழுப்பான‌ பாறைக‌ளில் போராட்ட‌மாக‌ ஏற‌ வேண்டி வ‌ருமே என்ப‌து தான் அவ‌ர‌து த‌ய‌க்க‌த்திற்கு கார‌ண‌ம். அவ‌ரையும் இழுத்துக்கொண்டு ஒரு வ‌ழியாக‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் மெயின் அருவி கொட்டும் இட‌த்திற்கு சென்ற‌டைந்தோம். அந்த‌ இட‌த்தில் இருந்து அந்த‌ த‌டா அருவியைப் பார்த்த‌பொழுது ஆஹா… என்ன‌ இட‌ம்.. ப‌ல‌த்த‌ ச‌த்த‌த்துட‌னும் சிலு சிலுவென‌ உட‌ம்பில் ப‌ட்ட‌ சார‌லுட‌னும் இருந்த‌ அந்த‌ அருவி என்னை கேர‌ளாவில் சால‌க்குடி அருகில் உள்ள‌ அதிர‌ப்ப‌ள்ளி (புன்ன‌கை ம‌ன்ன‌ன்) அருவியை ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து.

நாங்க‌ள் எவ்வ‌ள‌வோ முய‌ன்றும் அந்த‌ அருவியில் விழும் த‌ண்ணீரில் கூட‌ குளிக்க‌ முடிய‌வில்லை, அந்த‌ அள‌வு த‌ண்ணீர் அதி வேக‌மாக‌ வ‌ந்த‌தும், அருவியின் அருகில் உள்ள‌ பாறைக‌ள் வ‌ழுக்கும்ப‌டியாக‌ இருந்த‌தாலும் எங்க‌ளினால் அருவியைப் பார்த்து ர‌சிக்க‌ ம‌ட்டுமே முடிந்த‌து. ப‌ல‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை நாங்க‌ள் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே இறங்கலாம் என்ற‌தும் தான் ஆஹா… வந்த‌ மாதிரியே ப‌ல‌ பாறைக‌ளில் ஏறி இற‌ங்க‌ வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு வேறு வ‌ழியில்லாம‌ல் ஒரு ம‌ன‌தாக‌ இற‌ங்கி கீழே நாங்க‌ள் முன்ன‌மே பார்த்த‌ அருவியில் குளித்துவிட்டு மாலை சென்னை திரும்பினோம்.

காட்டுக்குள் இவ்வ‌ள‌வு தூர‌ம் ந‌ட‌ந்து சென்ற‌து எங்க‌ளுக்கு அதுவே முத‌ல் முறை ம‌ற்றும் எங்க‌ளில் அது ஒரு ம‌ற‌க்க‌ முடியாத‌ ஒரு ப‌ய‌ண‌மாக‌ அமைந்த‌து.

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 2 மறுமொழிகள் »

சூப்ப‌ர் சிங்க‌ர் 2008 நிக‌ழ்ச்சியில் ம‌னோ ம‌ற்றும் சித்ரா

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 24, 2009

விஜ‌ய் டி.வியில் தொட‌ர்ந்து பார்த்து ர‌சிப்ப‌துபோல் இருக்கும் நிக‌ழ்ச்சியில் ஒன்று சூப்ப‌ர் சிங்க‌ர் 2008 நிக‌ழ்ச்சி என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. இந்த‌ நிக‌ழ்ச்சியில் மனோ ம‌ற்றும் சித்ரா அவ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்ட‌ வார‌ம் மிக‌வும் சுவார‌ஸ்யமாக‌வும் ர‌சிக்கும்ப‌டியாக‌வும் இருந்த‌து. அதில் குறிப்பாக‌ மனோ.. அச‌த்தி விட்டார் அவ‌ர் செய்த‌ ஆக்டிங், மிமிக்ரி ம‌ற்றும் பாடும்பொழுது அவ‌ர் செய்த‌ அனாச‌ய‌ங்க‌ள் மேலும் நிக‌ழ்ச்சியை மெருகூட்டிய‌து.

ம‌னோ மேடையில் வ‌ந்த‌துமே அவ‌ர் என்.டி.ராம‌ராவ் போல் செய்த‌தும் ‘ஆயிர‌த்தில் நான் ஒருவன்’ என‌த் தொட‌ங்கும் ‘இருவ‌ர்’ ப‌ட‌ப் பாட‌லைப் பாடும்பொழுது அவ‌ர் செய்த‌ ஆக்டிங்கும், அட‌ ம‌னோ தானா என‌ விய‌க்கும்ப‌டியாக‌ இருந்த‌து. சின்ம‌யி ‘நேத்து ஒருத்த‌ர‌ ஒருத்த‌ரு பார்த்தோம்’ பாட‌லை சோக‌மாக‌ப் பாட‌ச் சொல்லிக் கேட்க‌ ம‌னோ அந்த‌ப் பாட‌லை சோக‌மாக‌ப் பாடி க‌ல‌க்கிய‌து ர‌சிக்கும்ப‌டியாக‌ இருந்த‌து. நீண்ட‌ நாட்க‌ள் க‌ழித்து ம‌னோ ம‌ற்றும் ‘சின்ன‌ குயில்’ சித்ரா அவ‌ர்க‌ள் மேடை நிக‌ழ்ச்சியில் பாடுவ‌தை பார்க்கும் வாய்ப்பு அனைவ‌ருக்கும் இந்த‌ சூப்ப‌ர் சிங்க‌ர் நிக‌ழ்ச்சி மூல‌ம் கிடைத்த‌தில் விஜ‌ய் டி.விக்கு தான் ந‌ன்றி சொல்ல‌வேண்டும்.

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

த‌ட‌ம் மாறிய‌ ப‌ய‌ண‌ம்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 17, 2009

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து ம‌துரை சென்ற‌ பொழுது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது. நாங்க‌ள் ஈரோட்டிலிருந்து ம‌துரை செல்வ‌த‌ற்காக‌ மும்பை-நாக‌ர்கோவில் எக்ஸ்பிர‌ஸில் முன்ப‌திவு செய்திருந்தோம். மாலை 5.10 க்கு ர‌யில் கிள‌ம்பும் என்ப‌தால் நாங்க‌ள் 4.30 ம‌ணிக்கே ர‌யில் நிலைய‌ம் சென்றுவிட்டோம். ர‌யில் நிலைய‌ விசார‌ணை அலுவ‌ல‌க‌த்தில் மும்பை ர‌யில் எந்த‌ பிளாட்பார‌ம் என்று கேட்ட‌பொழுது முத‌ல் பிளாட்பார்மில் நிற்கிற‌து சீக்கிர‌ம் செல்லுங்க‌ள் என்றார்க‌ள்.

நாங்க‌ளும் வேக‌மாக‌ ர‌யிலை நோக்கி சென்றோம். என் க‌ண‌வ‌ர் அவ‌ச‌ர‌ப்ப‌டுத்திய‌தால் வேக‌மாக‌ப் ப‌டியேறி பிளாட்பார்மில் ஓடிய‌பொழுது வ‌ழுக்கி அதே இட‌த்தில் விழுந்துவிட்டேன். விழுந்த‌தில் காலிலும் அடி, ஒரு செருப்பும் அறுந்துவிட்ட‌து, என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் செருப்பை ஒரு கையில் பிடித்த‌ப‌டி நிற்கிறேன், என் க‌ண‌வ‌ரோ ப‌ர‌வாயில்லை ர‌யிலில் ஏறி பார்த்துக்கொள்ள‌லாம் ஓடி வா என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினார். ஒரு வ‌ழியாக‌ எங்க‌ள் க‌ம்பார்ட்மெண்டில் ஏறி எங்க‌ள் சீட் நெம்ப‌ரை தேடிய‌பொழுது அங்கே ஏற்க‌ன‌வே இருவ‌ர் அம‌ர்ந்திருந்த‌ன‌ர். ஏற்க‌ன‌வே ஓடி வ‌ந்த‌ க‌ளைப்புட‌னும் செருப்பு அறுந்த‌ கோப‌த்துட‌ன் இருந்த‌ நான் அவ‌ர்க‌ளிட‌ம் இது எங்க‌ள் சீட் என்று க‌டுப்பாக‌க் கூறிய‌வுட‌ன் அவ‌ர்க‌ள் பேசாம‌ல் எழுந்து சென்று எதிற்புற‌ம் அம‌ர்ந்த‌ன‌ர். வ‌ண்டி பிளாட்பார‌த்தில் இருந்து புற‌ப்ப‌டத் த‌யாரான‌தும் உள்ளே காபி.. காபி… காபி..  சார் காபி… சார் காபி..காபி.. காபி… சார் காபி.., என்று கூவி காபி விற்றுக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் வ‌ண்டி கிள‌ம்பிய‌தும் ஓடும் வ‌ண்டியில் இருந்து ச‌ற்றும் அல‌ட்டாம‌ல் இற‌ங்கி சென்ற‌தைப் பார்த்த‌தும், எப்ப‌டி இவ‌ர்க‌ளால் ம‌ட்டும் இப்ப‌டி அனாச‌ய‌மாக‌ ஓடும் வ‌ண்டியில் இருந்து இற‌ங்க முடிகிற‌து என்று நினைத்துக் கொண்டேன். வ‌ண்டியும் வேக‌ம் பிடித்த‌து.

நான் என் க‌ணவ‌ரிட‌ம் ஏன் இன்று சீக்கிர‌ம் ர‌யில் கிள‌ம்பிவிட்ட‌து 4.45 க்கே கிள‌ம்பிய‌தால் 9.45 க்கு ம‌துரை சென்று விட‌லாம் என்று ம‌கிழ்ச்சியுட‌ன் சொல்லிக் கொண்டிருந்த‌ சிறிது நேர‌த்தில் டி.டி.ஆர் வ‌ந்து எங்க‌ள‌து ப‌ய‌ண‌ச்சீட்டை வாங்கி ச‌ரி பார்த்தார். சிறிது நேர‌ம் புர‌ட்டி புர‌ட்டி பார்த்த‌வ‌ர் ச‌ற்று குழ‌ப்ப‌த்துட‌ன் அம‌ர்ந்து நிதான‌மாக‌ எங்க‌ளைப் பார்க்க‌ ஆர‌ம்பித்தார்.

என‌க்கு சிறிது ப‌த‌ட்ட‌மாக‌ இருந்த‌து ஏனென்றால் அது இன்ட‌ர்நெட்டில் வீட்டிலேயே புக் செய்த‌ டிக்கெட் என்ப‌தால் ஒருவேளை என் க‌ண‌வ‌ர் த‌வ‌றான‌ தேதியில் புக் செய்து விட்டாரோ என்று எண்ணி அவ‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ரும் இல்லை நான் இர‌ண்டு முறை செக் ப‌ண்ணிவிட்டேன் புற‌ப்ப‌டும் தேதி, ர‌யில் எண் எல்லாமே ச‌ரியாக‌ இருந்த‌து என்றார். ஆனால் டி.டி.ஆர் முக‌த்தை குழ‌ப்ப‌த்துட‌ன் வைத்துக் கொண்டு அவ‌ருடைய‌ சார்ட் ம‌ற்றும் எங்க‌ள‌து ப‌ய‌ண‌ச்சீட்டையும் ப‌ல‌ முறை புர‌ட்டிக்கொண்டிருந்தார். ஒரு வ‌ழியாக‌ ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து எங்க‌ளிட‌ம் திரும்பி ரொம்ப‌வும் கூலாக‌ சார் நீங்க‌ள் வ‌ண்டி மாறி ஏறிவிட்டீர்க‌ள் என்று சொன்ன‌தும் ஆஹா.. இத‌ற்கா இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு ஏறினோம் என்று நினைத்து ஏமாற்ற‌ம‌டைந்த‌தை சுதாரித்துக்கொண்டு டி.டி.ஆரிட‌ம் இது மும்பை-நாக‌ர்கோவில் வ‌ண்டி தானே, நாங்க‌ள் பார்த்துதானே ஏறினோம் என்றேன். அவ‌ரும் சிரித்துக்கொண்டே இதுவும் மும்பை-நாக‌ர்கோவில் வ‌ண்டி தான் ஆனால் நீங்க‌ள் செல்ல‌ வேண்டிய‌து மும்பையிலிருந்து வ‌ந்து ம‌துரை வ‌ழியாக‌ நாக‌ர்கோவில் செல்லும் வ‌ண்டி, ஆனால் இதுவோ நாக‌ர்கோவிலில் இருந்து ஈரோடு வ‌ந்து மும்பை செல்லும் வ‌ண்டி என்றும், இந்த‌ வ‌ண்டி இர‌ண்டு ம‌ணி நேர‌ம் தாம‌த‌ம் என்ப‌தால் ஈரோட்டிற்கு உங்க‌ள் வ‌ண்டி வ‌ரும் அதே நேர‌த்திற்கு இதுவும் வ‌ந்து விட்ட‌து என்று விள‌க்கினார்.

நாங்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் முக‌த்தைப் பார்த்துகொண்டிருக்கையில் வ‌ண்டி ப‌ல‌த்த‌ வேக‌த்துட‌ன் காவேரி பால‌த்தைக் க‌ட‌ந்து கொண்டிருந்த‌து. இனி என்ன‌ செய்வ‌து என்று டி.டி.ஆரிட‌ம் கேட்ட‌தும், அவ‌ர் வேறு வ‌ழியில்லை நீங்க‌ள் சேல‌த்தில் இற‌ங்கி ப‌ஸ்ஸில் ம‌துரை செல்ல‌ வேண்டிய‌து தான் என்றார். ஒரு வேளை நீங்க‌ள் செல்ல‌ வேண்டிய‌ வ‌ண்டி தாம‌த‌மானால் நீங்க‌ள் சேல‌த்தில் அந்த‌ வ‌ண்டியில் ஏறிக்கொள்ள‌லாம் ஆனால் அது உங்க‌ள் அதிர்ஷ்ட‌த்தைப் பொறுத்த‌து என்று அவ‌ர் சொல்லி வாய் மூடிய‌துமே ச‌ங்க‌கிரியில் அந்த‌ வ‌ண்டி எங்க‌ள் எதிர்புற‌ம் க‌ட‌ந்து சென்றுகொண்டிருந்த‌து. இருந்த‌ ஒரு வ‌ழியும் போய்விட்ட‌து என்ற‌தால் நாங்க‌ள் அடுத்த‌ ர‌யில் ம‌துரைக்கு எப்பொழுது என்ற‌தும் சேல‌த்தில் இர‌வு 2 ம‌னிக்கு என்றார். இர‌வு 2 ம‌ணி வ‌ரை என்ன‌ செய்வ‌து என்று புரியாம‌ல் விழித்த‌பொழுது அவ‌ரே வேறு வ‌ழியில்லை சார், சேல‌த்தில் இற‌ங்கி ம‌துரைக்கு ப‌ஸ் பிடித்து செல்லுங்க‌ள் என்று கூறிவிட்டு அவ‌ர் சென்றுவிட்டார்.

எங்க‌ள‌து நிலைமையை நினைத்து வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தா இல்லை சிரிப்ப‌தா என்றே தெரிய‌வில்லை, ஏனென்றால் என்னால் ப‌ஸ்ஸில் அதிக‌ தொலைவு ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌தால் தான் நாங்க‌ள் எப்பொழுதும் ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். இப்பொழுது அதை விட‌ அதிக‌ தூர‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டுமே என்ன‌ செய்வ‌து என்று வ‌ருந்தினோம். வேறு வ‌ழியில்லை என்ப‌தால் நாங்க‌ளே ஒருவ‌ரையொருவ‌ர் ச‌மாதான‌ப்ப‌டுத்திக் கொண்டிருக்கையிலேயே வ‌ண்டி சேல‌ம் ர‌யில் நிலைய‌த்தை வந்து சேர்ந்த‌து. பின் நாங்க‌ள் சேல‌ம் ப‌ஸ் நிலைய‌ம் சென்று என‌க்கு செருப்பும் வாங்கிக்கொண்டு ம‌துரை போகும் ப‌ஸ்ஸில் ஏறி எப்பொழுது ம‌துரை சென்ற‌டையும் என்று க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் கேட்ட‌தும் அவ‌ர் ரொம்ப‌ கூலாக‌ ந‌ள்ளிர‌வு 1.30 ம‌ணிக்கு ம‌துரை சென்று விடும் என்றார். ஈரோட்டில் இருந்து 5 ம‌ணி நேர‌ ப‌ஸ் ப‌ய‌ணம் என்னால் முடியாது என்று ர‌யிலில் செல்லும் நாங்கள் அன்று வேறு வ‌ழியின்றி 8 ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்து ம‌துரை சென்ற‌டைந்தோம்.

அன்று முத‌ல் ர‌யில் நிலைய‌ம் சென்றால் என்ன‌ அவ‌ச‌ர‌ம் என்றாலும் ர‌யிலில் ஏறிய‌வுட‌ன் ப‌க்க‌த்து சீட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து நீங்க‌ள் எங்கே செல்கிறீர்க‌ள் என்று கேட்டு விடுவேன். இன்றும் ஈரோடு பிளாட்பார்மில் ஒரு காலில் செருப்புட‌னும் ஒரு கையில் அறுந்த‌ செருப்பையும் தூக்கிக்கொண்டு ஓடிய‌தை என‌து வாழ்க்கையில் ம‌ற‌க்க‌வே முடியாது.

- மீனா மாத‌வ‌ன், ஈரோடு

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 1 மறுமொழி »

பில்லூர் – ஒரு த்ரில் ப‌ய‌ண‌ம்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 4, 2009

க‌ல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌ம் ப‌ல‌ முறை பில்லூர் செல்ல‌ வாய்ப்பு கிடைத்த‌து. அங்கு எனது உற‌வின‌ர் பாபு* த‌மிழ்நாடு குடிநீர் வ‌டிகால் வாரிய‌த்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவ‌ர் அங்கிருந்த‌தால் அடிக்க‌டி அங்கு போகும் வாய்ப்பு எங்க‌ளுக்கு கிடைத்த‌து. அப்ப‌டி ஒரு முறை செல்லும்போது ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

அப்பொழுதெல்லாம் க‌ல்லூரி விடுமுறை என்றால் என்னுட‌ன் என் ந‌ண்ப‌ர்க‌ள் அசோக்* ம‌ற்றும் ல‌க்ஷ்ம‌ண‌ன்* சேர்ந்து கொள்வார்க‌ள். இதில் அசோக் வ‌ணிக‌ வ‌ரி துறையில் ப‌ணி புரிந்து கொண்டு இருந்தான், சிரு வ‌ய‌திலிருந்தே என் நெருக்க‌மான ந‌ண்ப‌ர்க‌ளில் ஒருவ‌ன். அப்ப‌டித் தான் ஒரு நாள் திடீரென்று நாங்க‌ள் ஒன்று சேர‌, என் த‌ம்பி ச‌ர‌வ‌ண‌னும்* கோய‌ம்ப‌த்தூரிலிருந்து வ‌ந்திருந்தான். அசோக்கிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் பில்லூரைப் பற்றி முன்பே சொல்லியிருந்த‌தால் அவ‌ன் நாம் இரண்டு நாட்க‌ள் பில்லூர் போய்வ‌ர‌லாம் என‌ ஆர‌ம்பிக்க‌ கூட‌ ல‌க்ஷ்ம‌ண‌னும் சேர்ந்து சென்று வ‌ர‌லாம் என‌ சொல்ல‌ ச‌ரி என்று கிள‌ம்ப முடிவெடுத்தோம்.

நாங்க‌ள் ஈரோட்டில் இருந்து கிள‌ம்பும் போதே மாலை 5 ம‌ணிக்கு மேல் ஆகி விட்ட‌தால் சற்று த‌ய‌க்க‌மாக‌ இருந்த‌து ஏனென்றால் கார‌ம‌டை எனும் இட‌த்தில் இருந்து காட்டுக்குள் 40 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் செல்ல‌ வேண்டும் என்ப‌தே அந்த‌ த‌ய‌க்க‌த்துக்கு கார‌ணம்.  அசோக்  ச‌ற்றும் யோசிக்காம‌ல் கிள‌ம்புவோம் என‌ வ‌ற்புருத்த‌ ஒரு ம‌ன‌தாக‌ கிள‌ம்பினோம். அசோக் எங்க‌ளுட‌ன் பில்லூர் வ‌ருவ‌து அதுவே முத‌ல் முறை ஆனால் நான் ம‌ற்றும் என்னுட‌ன் வ‌ந்த‌ உற‌வின‌ர் ச‌ர‌வ‌ண‌ன் முன்பு சென்ற‌ அனுப‌வ‌த்தில் சற்று நேர‌மாகி விட்ட‌தால் யோசித்தோம்.

பில்லூர் செல்லும் ம‌லைப்பாதை மிக‌வும் அட‌ர்ந்த‌ காடுக‌ள் நிறைந்த‌ ப‌குதி ம‌ற்றும் யானைக‌ள் அதிக‌ம் உள்ள‌ இட‌ம் என்ப‌தால் தான் அந்த‌ ப‌ய‌ம். நாங்க‌ள் சொல்வ‌தை கேட்கும் நிலையில் அசோக் இல்லை ஏனென்றால் அவ‌னுக்கு அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளும் விடுமுறை. அவ‌னுட‌ன் அவ‌ன் ந‌ண்ப‌ன் ம‌கேஷும்* சேர்ந்து கொண்டு நானும் வ‌ருகிறேன் புற‌ப்ப‌ட‌லாம் என்று சொல்ல‌ நானும் ச‌ர‌வ‌ணனும் ச‌ரி நாம் தான் ஐந்து பேர் உள்ளோமே என்ற‌ தைரிய‌த்தில் அசோக்கின் காரையே ஒருவ‌ழியாக‌ எடுத்துக் கொண்டு கிள‌ம்பினோம்.

நாங்க‌ள் கார‌ம‌டை சென்ற‌டையும்போதே ம‌ணி 8.40 ஆகி விட்ட‌து, இன்னும் சுமார் 40 கிலோ மீட்ட‌ர் செல்ல‌ வேண்டும் அதுவும் அட‌ர்ந்த‌ காட்டுக்குள், நினைத்துப் பார்க்க‌வே ச‌ற்று ப‌ய‌மாக‌த் தான் இருந்த‌து. ச‌ரி இத்த‌னை பேர் உள்ளோமே என்ற‌ தைரிய‌த்தில் கார‌ம‌டையில் தேவையான‌ பொருட்க‌ளை வாங்கிவிட்டு காரை கிள‌ப்பினோம். பில்லூரில் பாபு டேமிலிருந்து இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தொலைவில் வாட்ட‌ர் போர்ட் குவார்ட்ட‌ர்சில் த‌ங்கி இருந்த‌தால் அங்கு எதுவும் கிடைக்காது. கார‌ம‌டையில் இருந்து தான் எதுவென்றாலும் வாங்கி செல்ல‌ வேன்டும். ம‌கேஷ் கார‌ம‌டையிலிருந்து காரை கிள‌ப்பி 10 அல்ல‌து 15 கிலோ மீட்ட‌ர் தாண்டிய‌துமே என் முக‌த்தைப் பார்த்தான். அசோக்கும் ல‌க்ஷ்ம‌ண‌னும் போகும் பாதையை க‌வ‌னிக்காம‌ல் ஏதோ ச‌ண்டை போட்டுக் கொன்டிருந்த‌ன‌ர்.

நானும் ச‌ர‌வணனும் போகும் பாதையையே உற்று க‌வ‌னித்துக் கொண்டிருந்தோம், ஏனென்றால் கார‌ம‌டையிலிருந்து குந்தா ரோட்டில் ச‌ரியாக‌ 25 கிலொ மீட்ட‌ரில் வ‌ல‌து பக்க‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தே. ம‌கேஷ் ரோட்டில் உடும்பு க‌ட‌ந்த‌துமே ச‌ற்று ப‌ய‌த்துட‌ன் நீங்க‌ள் யாராவ‌து காரை ஓட்டுங்க‌ள் என‌ ஆர‌ம்பித்தான். ஏன் அந்த‌ ப‌ய‌ம் என்றால் கார‌ம‌டையிலிருந்து 20 கிலோ மீட்ட‌ர் தாண்டியும் எந்த‌ வாக‌ன‌த்தையும் நாங்க‌ள் பார்க்க‌வில்லை என்பதே. நான் ம‌கேஷை நீயே ஓட்டு இங்கு வ‌ண்டியை நிறுத்த‌ வேண்டாம் என்று சொல்லி முடிக்கையில் கேர‌ளா செக் போஸ்ட் போர்ட் தெரிந்த‌து. நாங்க‌ள் ம‌கேஷை வ‌ல‌து ப‌க்க‌ ரோட்டில் திருப்ப‌ சொல்லி சிரிது தூர‌த்தில் வாட்ட‌ர் போர்ட் க்கான த‌னியார் பாதையில் வண்டியை விட‌ சொன்னோம்.

பாதையின் ஆர‌ம்ப‌த்தில் செக் போஸ்ட் தெரிந்த‌து, எங்கே இந்த‌ நேர‌த்தில் இவ்வ‌ழியாக‌ செல்கிறீர்க‌ள் என‌ கேட்க‌ நானும் ச‌ர‌வ‌ண‌னும் கீழே இர‌ங்கி அவ‌ர்க‌ளுக்கு பாபுவின் உற‌வின‌ர் என்று சொன்ன‌தும், அது ச‌ரி இந்த‌ நேர‌த்தில் இந்த‌ காட்டுப் பாதையில் எப்ப‌டி செல்வீர்க‌ள் என்ற‌தும் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம் சார் என்று வீராப்பாக‌ சொல்ல‌ அவ‌ர் போகும் போது வ‌ழியில் வ‌ண்டியை எங்கும் நிறுத்த‌ வேண்டாம் என்றும் காரின் டேப் ரெக்கார்ட‌ரை உப‌யோகிக்க‌ வேண்டாம் என்றும் சொல்லி அனுப்பி வைத்தார்.

செக் போஸ்ட்டில் இருந்து கிள‌ம்பிய‌துமே பாதை குருகி சிங்கிள் ரோடாகிய‌து ம‌கேஷுக்கு இன்னும் ப‌ய‌ம் அதிக‌ரித்த‌து, ஏனென்றால் வ‌ண்டியை எங்கும் திருப்ப‌ முடியாது. அந்த‌ப் பாதையில் வாட்ட‌ர் போர்ட் ஸ்கூல் வேன் ம‌ட்டுமே சென்று வ‌ரும், பாபுவுட‌ன் ப‌ணி புரிப‌வ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளை கார‌ம‌டைக்கு அருகில் இருக்கும் ஸ்கூலுக்கு கூட்டி சென்று வ‌ரும் வேறு எந்த‌ வாக‌ன‌மும் அதை உபயோகிக்க‌ முடியாது ஏனென்றால் இப்பாதை டேமிற்கு பின்புற‌ம் உள்ள‌ இவ‌ர்க‌ள் குவார்ட்ட‌ர்சிற்கு சென்று வ‌ர‌ ம‌ட்டும் தான். ரோட்டின் இருபுற‌மும் அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடி கொடிக‌ளும் தான் தெரிந்த‌து, காட்டு வ‌ண்டுக‌ளின் ச‌த்த‌ம் தான் ப‌ய‌முருத்துவ‌து போல் இருந்த‌து.

ஒரு வ‌ழியாக‌ நான்கு கிலோ மீட்ட‌ர் க‌ட‌ந்து இருப்போம், ஒரு வ‌ளைவில் திடீரென்று காரை நிறுத்திய‌தும் அனைவ‌ரும் ப‌ய‌ந்தே போய்விட்டோம். ம‌கேஷ் க‌த்தியே விட்டான் ஏனென்றால் ரோட்டில் யானையின் ல‌த்தி அதில் ஆவி வேறு பற‌ந்து கொண்டிருந்த‌து. அப்பொழுது தான் யானை அந்த‌ வ‌ழியாக‌ க‌ட‌ந்து சென்றிருக்க‌க்கூடும். ஒரு வ‌ழியாக‌ ம‌கேஷுக்கு தைரிய‌ம் கொடுத்து காரைக் கிளப்பினோம். அது வ‌ரை அசோக்கும் ல‌க்ஷ்ம‌ண‌னும் ச‌ண்டை போட்டு வ‌ந்த‌வ‌ர்க‌ள் நான் திரும்பிப் பார்த்த‌போது ஒருவ‌ரையொருவ‌ர் முக‌த்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்க‌ள். காரின் பின் க‌த‌வு க‌ண்ணாடிக‌ள் ஏற்றப்ப‌ட்டிருந்த‌து.

அப்பொழுது தான் நாங்க‌ள் கிள‌ம்பும் போதே யோசித்த‌து அவ‌ர்க‌ளுக்கு உறைக்க‌ ஆர‌ம்பித்த‌து. ம‌கேஷ் ஒரு இட‌த்தில் காரை நிறுத்தி இந்த‌ இட‌த்தில் ரோடு கொஞ்ச‌ம் அக‌ல‌மாக‌ இருக்குது இங்கேயே திருப்பி வ‌ந்த‌ வ‌ழியாக‌வே திரும்பி போய்விட‌லாம் என்ற‌தும் அனைவ‌ரும் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்து யோசித்தோம். அதில் ச‌ர‌வ‌ண‌ன் அண்ணா இன்னும் கொஞ்ச‌ தூர‌ம் தான், அடுத்து இன்னும் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர்ல‌ குவார்ட்ட‌ர்ஸ் கேட் வந்திடும் என‌ சொல்ல‌ நாங்க‌ள் ம‌கேஷை உசுப்பி தைரிய‌ம் சொல்லி கிள‌ம்பினோம்.

காரில் ஒரே மெள‌ன‌ம் தான், யாரும் பேசிக்கொள்ள‌வில்லை. அனைவ‌ரும் ரோட்டையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தோம். ம‌கேஷ் கோப‌த்தில் க‌த்திக்கொண்டே வ‌ந்தான், ஏனென்றால் ச‌ர‌வ‌ணன் சொன்ன‌து போல் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தாண்டியும் இன்னும் இட‌ம் வ‌ர‌வில்லை என்ப‌தே. என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கும் தான் தெரியும் இர‌ண்டு கி.மீ இல்லை இன்னும் பத்து கி.மீட்ட‌ராவ‌து செல்ல‌ வேண்டும் என்று.

ஒரு இட‌த்தில் நாங்க‌ள் போன‌ பாதை அத்துட‌ன் முடிந்து ஏதொ ஒரு சிரிய‌ ம‌ண் ரோடு பிரிந்த‌து, காரை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தால் அது காட்டுக்குள் ஆட்க‌ள் ந‌ட‌ந்து செல்ல‌ உப‌யோகிக்கும் பாதை என்ப‌து புரிந்த‌து. பின் தான் புரிந்த‌து நாங்க‌ள் கேட்டைத் தாண்டி வ‌ந்து விட்டோம் என்று. ச‌ரி வேறு வ‌ழியில்லை வ‌ண்டியை ரிவேர்ஸ் தான் எடுத்தாக‌ வேண்டும் என்றால் பின்னால் என்ன‌ இருக்கிற‌து என்ப‌தே தெரிய‌வில்லை. ரிவேர்ஸ் லைட் இல்லையாடா அசோக்கு என்ற‌தும் அவ‌னுக்கு மூக்கிற்கு மேல் கோப‌ம் வ‌ந்த‌து, ஏன்டா கேட்க‌ மாட்டீங்க‌ன்னு ச‌த்த‌ம் போடும் போதே நானும் ம‌கேஷும் அந்த‌ காட்டுப் பாதையில் திருப்பி விட‌லாம் என‌ முடிவெடுத்தோம்.

சிறு சிர‌ம‌ங்க‌ளுக்குப் பிற‌கு ஒரு வ‌ழியாக‌ வ‌ண்டியைத் திருப்பினோம், திருப்பிய‌தும் ம‌கேஷ் எப்ப‌டிடா என்றான், டேய் போதும், இனியாவ‌து ரோட்ட‌ பார்த்துப் போ என்று சொன்ன‌தும் அவ‌ன் ச‌ர‌வ‌ண‌னையும் என்னையும் திட்ட‌ ஆர‌ம்பிக்கும்போதே, TWAD போர்ட் தெரிந்த‌து, அப்பாடா என்று அனைவ‌ரும் பெருமூச்சு விட்டோம், ஹார‌னை அழுத்தி பாபுவிற்காக‌ காத்திருந்தோம். பாபுவுட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ள் எப்ப‌டி இந்த‌ நேர‌த்தில் தைரிய‌மாக‌ இந்த‌ காட்டிற்குள் வ‌ந்தீர்க‌ள் என‌ ஆச்ச‌ர்ய‌ம் க‌ல‌ந்த‌ ப‌ய‌த்தோடு வ‌ர‌வேற்றார்க‌ள்.

நான் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு போயிருக்கிறேன் ஆனால் அவை எதுவுமே பில்லூர் அள‌வு என் ம‌ன‌தில் நிற்க‌ மறுக்கிற‌து என்றே சொல்ல‌லாம். நாங்க‌ள் இருந்த‌ இட‌ம் சுற்றிலும் அட‌ர்ந்த‌ காடு ந‌டுவில் டேம் ம‌ற்றும் TWAD குவார்ட்ட‌ர்ஸ் த‌னியாக‌ ஒரு ஒதுக்குப்புறத்தில் ம‌லைக்கு ந‌டுவே இருந்த‌து. நாங்க‌ள் இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்து எங்க‌ளுக்கு கிள‌ம்ப‌வே ம‌ன‌ம் இல்லை, மீண்டும் ஒரு நாள் இருந்து விட்டுத்தான் வ‌ந்தோம்.

இப்பொழுது நாங்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டாலும் பில்லூர் அனுப‌வ‌ம் ப‌ற்றி பேசாம‌ல் இருந்த‌தில்லை. என் வாழ்க்கையில் என்றுமே ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌ய‌ண‌ம் அது.

* பெய‌ர்க‌ள் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து.

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | 7 மறுமொழிகள் »

அசத்தல் சக்கரவர்த்தி – திண்டுக்கல் லியோனி

பதிந்தவர் சூர்யா மேல் December 8, 2008

சமீபத்தில் சன் டிவியில் “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சியை நண்பர்களுடன்  பார்த்தேன். அதில் திண்டுக்கல் லியோனி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.  அவருடைய பட்டிமன்றம் நாம் நிறைய பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அவருடைய பட்டிமன்ற நிகழ்ச்சியிலேயே “பழைய பாடலா புதிய பாடலா” மிகவும் பிரபலமானது. பட்டி தொட்டி எல்லாம் ஒரு கால கட்டத்தில் அது தான் ஒலித்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது எங்கு சுற்றுலா சென்றாலும் வண்டியில் லியோனியின் கேசட்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி தொடங்கும்போதே லியோனி த‌ன்னுடைய‌ அசத்தலை ஆரம்பித்துவிட்டார். நிகழ்ச்சியில் ஒவ்வொரு அசத்தல் மன்னரும் வந்து அவரவர் திறமையை காண்பித்து முடித்ததும் மதன் இது எப்படி சார் இருந்தது என்று லியோனியிடம் கேட்டதும் அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டை ஞாபகப்படுத்தி அவர் சொன்ன விதம் ஒவ்வொன்றும் ஆகா அசத்தல். அவரிடம் உள்ள அந்த டைமிங் மற்றும் பேச்சில் உள்ள நகைச்சுவை உணர்வு வியக்கவைத்தது. பட்டிமன்றம் என்றால் எல்லாம் நன்றாக தயார் நிலையில் தான் வருவார்கள் அதில் அப்படி பேசுவது வியப்பை தரவில்லை, ஆனால் இந்த மாதிரியான நிகழ்ச்சியில் அந்த இடத்தில் பேசும்பொழுது நல்ல அனுபவம் மற்றும் கோர்வையான பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி பேசும் அளவுக்கு திறமை வேண்டும், அது லியோனி போல் சில பேரால் மட்டுமே பேச முடியும். நிகழ்ச்சியின் முடிவில் ம‌த‌ன்பாப் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் எல்லாம் அசத்தல் மன்னர்கள் தான் ஆனால் நீங்கள் தான் எங்களை எல்லாம் அசத்தி “அசத்தல் சக்கரவர்த்தி” ஆகி விட்டீர்கள் என்றார்.

உண்மை தான், லியோனி என்றுமே அசத்தல் சக்கரவர்த்தி தான்.

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | 4 மறுமொழிகள் »

வேலூர் பொற்கோவில் ஓர் அனுபவம்..

பதிந்தவர் சூர்யா மேல் நவம்பர் 26, 2008

சமீபத்தில் திருப்பதி செல்லும் வாய்ப்பு கிடைத்தது, வரும் வழியில் வேலூரில் பொற்கோவில் சென்று வாருங்கள் என்று உறவினர்கள் சொல்ல, பொற்கோவில் எப்படி கட்டியிருக்கிறார்கள் என்று பார்க்கவும் மற்றும் வரும் வழியில் போதிய நேரம் இருந்ததாலும் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தோம்.

நுழைவாயிலிலேயே செல்போன், கேமரா அனுமதியில்லை என்று போர்டு பெரிய எழுத்தில் தெரிகிறது. திருப்பதியின் தாக்கம் கோவிலின் வாசலிலேயே தெரிய ஆரம்பித்தது.

கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் வெளியே தரிசன நேரம் 2 மணி நேரம் என்று போர்டு மாட்டியிருக்கிறார்கள். சிறப்பு தரிசன டிக்கெட்டை (இருநூருக்கு மேல்) எடுத்தால் நேராக உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். நாங்கள் கூட்டம் இல்லாததால் தர்ம தரிசனத்திலேயே சென்றோம். வரிசை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் கோவில் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. கோவில் என்றால் கோபுரத்தைத் தான் தேடுவோம், ஆனால் அங்கே கோபுரம் தெரியாத மாதிரி கட்டியிருக்கிறார்கள். எத்தனை ஏக்கரில் கட்டியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஏனென்றால் கோவில் கேட்டுக்கு செல்லவே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.

அதுவுமில்லாமல் வரிசை ஆரம்பிக்கும்போதே விமான நிலையம் போல் அனைத்து சோதனையும் நடக்கிறது. திருப்பதியில் கூட இப்படி சோதனை செய்வதாகத் தெரியவில்லை. சோதனை முடிந்ததும் ஒரு பெரிய கூண்டில் அடைத்து வைத்ததைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் கூட்டமும் அதிகம் இல்லை, இவர்கள் ஏன் அடைத்து வைக்கிறார்கள் என்று  நாங்கள் ஒருவொருக்கொருவர் கேட்டுக் கொண்டோம். கூண்டில் உள்ளே போய் அமர்ந்ததும் தான் ஏன் என்று கொஞ்சம்  கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஆறு அல்லது எட்டு கூண்டுகள் இருந்தும் ஒரு கூண்டில் தான் அடைத்து வைக்கிறார்கள்.

அதன் பிறகு LCD டிவியில் கும்பாபிஷேக நிகழ்ச்சியைக் காண்பிக்கிறார்கள். ஏனென்றால் வருபவர்களுக்கு எல்லாம் தெரிய வேண்டுமல்லவா.. உள்ளேயே சின்ன கேண்டீனும் இருக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்ததும் சிறிது நேரத்திலேயே கேட்டைத் திறக்கிறார்கள். சுற்றி சுற்றி வந்து ஒரு வழியாக கோவிலுடைய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம். இதை எல்லாம் வைத்து பார்க்கும்பொழுது திருப்பதி தான் அடிக்கடி நினைவுக்கு வந்தது. முதலிலேயே பக்காவாக யோசித்து பிளேன் பண்ணி கட்டியிருக்கிறார்கள். சரி ஒரு வழியாக உள்ளே வந்துவிட்டோம் என்று நினைத்தால் அட மறுபடியும் சோதனை செய்கிறார்கள். அட என்னங்க இது ஏர்போர்ட்ல கூட இப்படி செக் பண்ணி பார்த்ததில்லை.

அந்த இடத்தில் இருந்து தான் பிரம்மாண்டம் ஆரம்பிக்கிறது. அமைதியான ஒதுக்குப்புறத்தில் இவ்வளவு செலவு செய்து ஒரு கோவில் எப்படி கட்ட முடிந்தது என்ற வியப்பு எல்லோருக்குமே வரத்தான் செய்தது. உள்ளே சென்றதும் தான் கோபுரமே தெரிகிறது, மற்றும் உள்ளே ஒரு தோட்டத்திற்கு நடுவே கோவில் இருப்பது போல் தெரிகிறது. சுற்றி வரும் வழியெல்லாம் பல போர்டுகளைப் பார்க்க முடிகிறது. அதில் முக்கியமாக “அம்மா” என்று ஒருவர் கிட்டத்தட்ட எல்லா போர்டுகளிலும் தெரிகிறார். அதற்கு பிறகு தான் LCD டிவியில் பார்த்த ஞாபகம் வந்தது, அதே ஆசாமி தான்.. எல்லாமே… நாராயணி அம்மன் சிலையை விட அந்த “அம்மா” உருவம் தான் தெரிந்தது.

அந்த போட்டோவையும் “அம்மா” என்ற அந்த போர்டையும் பார்த்ததுமே எனக்குள் கடும் கோபம் தான் வந்தது, நான் நினைத்தது கோவிலுக்குள் சாமி மட்டும் தான் இருக்கும் என்று. மக்கள் மேல் தான் மீண்டும் மீண்டும் கோபம் வந்தது, இன்னும் இந்த காலத்திலயும் இதை எல்லாம் இன்னும் நம்பிட்டு இருக்கிறாங்களே என்று. என்னுடன் வந்தவர் வேறு அவருக்கு ஏதோ உள்ளே வந்ததும் ஏதோ “vibration” தெரியுதுன்னு சொன்னார். அவரிடம் பெரிய விவாதமே நடத்த வேண்டி இருந்தது. பத்தாததற்கு உள்ளே உள்ள சின்ன குளத்தில காசு, பணம், மோதிரம் மற்றும் என்னன்னவோ போடுறாங்க.. நம்ம ஆளுங்க இன்னும் மாறல. உள்ளே போகிற வரைக்கும் தெரியல… உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, நல்லா யோசிச்சுதான் கட்டியிருக்கிறாங்க. எப்படியோ நாராயணி அம்மனை கும்பிட்டு விட்டு வெளியே வந்து கூட வந்தவர்களிடம் பல வாக்குவாதம் நடந்து பின் ஒரு வழியாக சமாதானமானோம்.. ஆனா சும்மா சொல்லக்கூடாது அட்டகாசமாக கட்டியிருக்காங்க ஆனா சாமி பக்கத்தில இந்த மாதிரி “அம்மா” ன்னு சொல்லிட்டு வேறு எதற்கோ முடிவு பண்ணி இதை ஆரம்பித்து செய்வது போல் தெரிகிறது..

எப்படியோ நம்ம தமிழ்நாட்டுலேயும் பொற்கோவில் இருப்பது நமக்கு பெருமை தான்.

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

எஸ்.பி.பி

பதிந்தவர் சூர்யா மேல் மார்ச் 31, 2008

பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஈரோட்டிற்கு ஒரு ஆர்க்கெஸ்ட்ராவிற்காக வந்து இருந்தார். நிகழ்ச்சிப்படி அன்று மாலை 6.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி எதிர்பாராது வந்த மழையின் காரணத்தினால் தாமதமாகியது. பொது மக்கள் அனைவரும் சுமார் ஒன்றரை மணி நேரம்   பொறுமையாய்  காத்திருந்தனர்சிறிது நேரத்திற்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது என்றாலும் சிறு தூரல் இருந்தது. மக்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தபோது இதை எல்லாம் காரினுள் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எஸ்.பி.பி. மைக்கில் யாரும் கலைந்து செல்ல வேண்டாம், மழை நின்றவுடன் கண்டிப்பாக எவ்வளவு நேரமானாலும் உங்களுக்காக முழு நிகழ்ச்சியும் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் என்றும், யாரும் அதுவரை அவசரப்பட்டு போக வேண்டாம் எனவும் கூறினார். ஆனாலும் சிலர் கலைந்து செல்வதை பார்த்ததும் மழை தூரலைக்கூட பொருட்படுத்தாமல் அவர் அனைத்து இன்ஸ்ட்ருமெண்ட்களையும் மழை தூரலால் நனையாதபடி ஏற்பாடு செய்யுமாறும் தான் பாடப்போவதகவும் மைக்கில் பேச, அனைவரும் சற்று நின்று வேடிக்கை பார்த்தனர் இந்த மழையில் எப்படி ஆரம்பிப்பார்கள் என்று.

ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தது. மழையினால் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் ரெடியாக சற்று நேரம் எடுத்தது. ஆனால் அதற்கு மேலும் மக்களை ஏமாற்ற எஸ்.பி. க்கு மனம் வரவில்லையோ என்னவோ, எந்த ஒரு பக்கவாதியமும் இல்லாமல் காரில் இருந்து குடையுடன் இறங்கி அவர்இளைய நிலாபாட்டை பாட ஆரம்பித்தபோது அதுவரை ஓரமாக மழைக்கு ஒதுங்கிய அனைவரும் மேடை அருகில் வர ஆரம்பித்தனர். அவர் பாடிக்கொண்டே மேடைக்கு வருவதை பார்த்த மக்கள் ஒரே ஆரவாரம். அந்தப்பாட்டில் ஆரம்பித்த அவர் தொடர்ந்து மூன்று பாடல்களை பாடி மக்களை மகிழ்ச்சியின் உச்சத்திர்க்கே கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகது. அவர் பாட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மழையும் விட்டது, ஆர்க்கெஸ்ட்ரா குழுவினரும் தங்கள் இன்ஸ்ட்ருமெண்ட்களை வாசிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் எஸ்.பி. ஒரு பாட்டை முடித்தவுடன் அடுத்த பாட்டிற்கு இடைவெளி இல்லாமல் பாட ஆரம்பித்தார்.  அவர்  பாட ஆரம்பித்த பிறகே இசையை குழுவினர் வாசிக்க முடிந்தது.

அனுராதா ஸ்ரீராமும் தன் பங்கிற்கு அசத்த நிகழ்ச்சி களை கட்டியது. அன்று நாங்கள் பார்த்தது இசை கச்சேரியை மட்டுமல்ல, எஸ்.பி. என்ற ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதரையும் தான்.

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »