தமிழக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருது
பதிந்தவர் சூர்யா மேல் பெப்ரவரி 23, 2009
தமிழகத்தின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காகவும், “ஜெய் ஹோ” என்ற அந்தப் படத்தின் பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
“ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துக்காக திரைக்கதை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங் உட்பட 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை 2 பிரிவுகளில் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை பெறும் ரஹ்மானுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழ் திரையுலகம் சார்பில் கே.பாலசந்தர், கமல்ஹாசன், எஸ்.வி.சேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் திரையுலகம் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரமாண்டமான பாராட்டு விழாவும் மிக விரைவில் நடைபெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விருதைப் பெறுவதற்காக மேடையேறிய ரஹ்மான் இறுதியில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசி தனது நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மேலும் இப்படத்திற்கு சவுண்ட் மிக்சிங்கிற்கான விருது இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரெசுல் பூக்குட்டிக்கு கிடைத்ததும், இதனால் மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்து இவ்விருவரும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளனர்.